Tuesday, July 14, 2009

என் உயிரின் உறவுக்கு #2

கண்ணென்ற ஒன்று
இல்லாமல் போனாலும்
நெஞ்சோடு உன் உருவம்
நான் சேர்த்து வைப்பேன்!

மனதென்ற ஒன்று
இல்லாமல் போனாலும்
மறக்காது உன் நினைவை
நான் சேர்த்து வைப்பேன்!

உயிரென்ற ஒன்று
இல்லாமல் போனாலும்
என் ஆவி என்றென்றும்
உன் பெயரே பாடும்!

இரவோடு என் நெஞ்சம்
உறங்காது அன்பே!
உன் உறவோடுதானே
கண் மூடும்!

என் செவியோடு உன்னை
இசையாக்கி வைத்தேன்!
என் கண்ணோடு உன்னை
இமையாக்கி வைத்தேன்!
என் உள்ளத்தில் உன்னை
உணர்வாக்கி வைத்தேன்!
என் உயிரோடு உன்னை
உறவாக்கி வைத்தேன்!

உன் நேசம் - நான்
கொண்ட வரமிது!
ஏழேழு ஜென்மத்தின்
தவமிது!

விழியோரம் துளிர்க்கும்
என் கண்ணீரைத் துடைக்க
என் மனமோ உன்
விரலைத் தேடும்! - அது
வாராமல் போனாலோ - என்
நெஞ்சம் வாடும்!

நான் சோர்வானபோது
இளைப்பாறிக் கொள்ள
என் மனமோ உன்
மடி சேரத் துடிக்கும்! -அது
கிடைக்காமல் போனாலோ- என்
இதயம் வெடிக்கும்!

என் வாழ்நாளில் எப்போதும்
அசை போடும் நேரங்கள்!
உன் அருகமர்ந்த நாட்கள்!
உன் தோள் சாய்ந்த தருணங்கள்!

என் கண்ணோடு இமையாய்
காதோடு இசையாய்
உள்ளத்து உணர்வாய்
மொத்தத்தில்
என் உயிரின் உறவாய் நீ1

இது நட்புக்கு நான்
சொல்லும் நன்றி! - இனி
ஓர் நாளும் இல்லை
நீ இன்றி!